இந்திய விடுதலைப் போராட்டத்தின் அறியப்படாத வரலாற்றின் ஒரு பார்வை - பாகம் 22

இந்திய விடுதலைப் போராட்டத்தின் அறியப்படாத வரலாற்றின் ஒரு பார்வை - பாகம் 22

கடந்த பதினொரு நாள் பயணத்தில், மோதிபாய்க்கும் நர்மதாபாய், பாஸ்கர் பட் மற்றும் சுபத்ராபாய் ஆகியோருக்கும் இடையிலான நட்பு மிகவும் ஆழமானது. ஏனென்றால் மோதிபாயிடம் இருந்த பல கதைகள், அதாவது அவள் நேரில் பார்த்த மற்றும் செய்த விஷயங்களைப் பற்றி இந்த மூவருக்கும் ஓரளவுக்குத் தெரிந்திருந்தது, மேலும் அதைப்பற்றி அதிகம் தெரிந்துகொள்ளும் ஆர்வமும் இருந்தது. அதனால் இந்த நால்வருக்கும் இடையே ஓயாமல் பேச்சு நடந்துகொண்டே இருக்கும். ஆனால் இந்த நால்வரும் முதியவர்கள் போல வேடமிட்டு மாட்டு வண்டியில் பயணம் செய்து வந்தனர். விடியற்காலை ஆவதற்கு முன்பே நதி அல்லது குளம் கரைக்குச் சென்று காலைக் கடன்களை முடித்துக்கொண்டு குளித்துவிடுவார்கள். ஏனென்றால் அவர்கள் அந்த ஊரிலிருந்து கிளம்பும்போதே கம்பெனிஅரசின் போலீஸ் குழு ஒன்று அந்த ஊரிலும் விசாரணைக்காக வந்திருந்தது. ராணி லக்ஷ்மிபாயுடன் தொடர்புடைய ஒவ்வொரு இந்தியரையும் தேடிக் கண்டுபிடித்து தூக்கிலிடுவதே அவர்களின் வேலையாக இருந்தது.

அந்த ஊரிலிருந்து ராணி லக்ஷ்மிபாயின் படையில் இணைந்து போரிட்டவர்கள் அனைவரும் வேண்டுமென்றே இந்த குழுவில் சேர்ந்துகொண்டனர். அவர்களும் புந்தேல்கண்ட் பகுதியைச் சேர்ந்த மராட்டிய மக்கள் போலவே வேடமிட்டிருந்தனர்.

காசி விஸ்வநாதர் ஆலயத்தின் கோபுரத்தைத் தரிசனம் செய்துவிட்டு, இந்த குழுவினர் அனைவரும் கங்கை கரைக்குச் சென்றனர். குளியல் முடித்துவிட்டு நதிக்கரையில் இருந்த ஒரு மரத்தின் நிழலில் அமர்ந்தார்கள். பாஸ்கர் பட் காசியில் இருந்த ஒரு பிராமண புரோகிதரின் உதவியைப் பெற்றார். இந்த பிராமணர் மிகவும் புத்திசாலி, அதே சமயம் பேராசைக்காரர். அவரது பணத்தாசையைப் பார்த்துதான் பாஸ்கர் பட் அவரைத் தேர்ந்தெடுத்திருந்தார். அதே நேரத்தில் அவரிடம் துளியும் செல்வம் இல்லை என்பதையும் கவனித்திருந்தார். பாஸ்கர் பட் ஏற்கனவே போதுமான அளவு பணம் கொடுத்திருந்ததால், அந்த புரோகிதர் அவர்களுக்கு வேண்டிய உதவிகளைச் செய்யத் தயாராக இருந்தார்.

தங்களது இந்த குழுவினர் முறைப்படி அஸ்தி விசர்ஜனம் செய்துவிட்டு, கூடிய விரைவில் காசியை விட்டு வெளியேற வேண்டும் என்று நினைத்தனர். ஏனென்றால் காசிக்கு ராணி லக்ஷ்மிபாய் வந்து சென்ற செய்தி (குறிப்பு: கதாமஞ்சரி 4-3-14) பிரிட்டிஷ் அதிகாரிகளுக்குத் தெரிந்திருந்ததால், ஒரு பிரிட்டிஷ் அதிகாரி தலைமையில் போலீஸ் அங்கே முகாமிட்டிருந்தது.

காலை பதினொரு மணிக்குள் காசிபாய், சுந்தர்பாய், லாலாபாவ் பக்ஷி மற்றும் மஞ்சுநாத் பஹாடி ஆகியோரின் அஸ்திகள் விசர்ஜனம் செய்யப்பட்டன. அதன்பின் பாஸ்கர் பட் தனது பெரியப்பா அதாவது மொரோபந்தின் அஸ்தியை விசர்ஜனம் செய்தார். அனைவரும் மீண்டும் அதே மரத்தடிக்குத் திரும்பினர். மதிய உணவை அந்த புரோகிதரே கொண்டு வந்திருந்தார். அந்த குழுவில் இருந்த ஒவ்வொருவரும் ஒரு வார்த்தை கூட பேசாமல் அந்த மரத்தடியில் அமர்ந்திருந்தனர். ஒவ்வொருவரின் மனதிலும் பல நினைவுகள் அலைமோதின. ஆனால் இது பார்ப்பதற்குச் சரியாக இருக்காது என்பதை உணர்ந்த விழிப்புணர்வு மிக்க மோதிபாய், அனைவரையும் உடனடியாக இயல்பு நிலைக்குத் திரும்பச் சொன்னாள். மற்ற யாத்ரீகர்களைப் போலவே நடந்து கொள்ளும்படி அறிவுறுத்தினாள். அவர்களுடன் வந்திருந்த அந்த ஊரைச் சேர்ந்த நான்கு ஆண்கள் மொட்டையடித்திருந்தனர், மேலும் அந்த கட்டத்தில் கூட்டமும் அதிகமாக இருந்தது. அதனால் தங்களை யாராவது அடையாளம் கண்டுகொள்ள வாய்ப்பில்லை என்று தோன்றினாலும், மோதிபாய் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டியிருந்தது.

மாலை ஆவதற்கு முன்பே இந்த குழுவினர் அனைவரும் ஊருக்குத் திரும்பும் பயணத்தைத் தொடங்கினர். மோதிபாய் மட்டும் சிமாபாய் ஆச்சார்யா என்ற பெயரில் ஒரு முதிய பிராமண கைம்பெண் வேடத்தில் தனது சிறிய மூட்டையுடன் அங்கேயே தங்கிவிட்டாள். இந்தக் குழுவினர் கிளம்பி இரண்டு மணி நேரம் கழித்து, அதாவது சூரியன் மறையும் நேரத்தில் மோதிபாய் சத்தமாக அழத் தொடங்கினாள்.

உடனடியாக அவளைச் சுற்றி ஒரு கூட்டம் கூடியது. அவர்களிடையே அந்த காலை நேர புரோகிதரும் இருந்தார். மோதிபாய் அவரிடமே கேட்கத் தொடங்கினாள், எனது உறவினர்கள் எல்லாம் எங்கே போனார்கள்? என்னை விட்டுட்டுப் போயிட்டாங்களா? அவங்க எனக்கு மிட்டாயைப் பிரசாதம் என்று சொல்லிச் சாப்பிடக் கொடுத்தாங்க, நான் தூங்கிட்டேன். எழுந்த பிறகு கடந்த இரண்டு மணி நேரமா அவங்களைத் தேடிக்கிட்டு இருக்கேன்.

காசி மக்களுக்கு இதுபோன்ற விஷயங்கள் பழகிப்போன ஒன்றுதான். பலர் தங்கள் வீட்டில் இருக்கும் முதியவர்களைக் காசியில் இறப்பதற்காக விட்டுவிட்டு அங்கிருந்து ஓடிவிடுவார்கள். இந்த புரோகிதருக்குத்தான் பாஸ்கர் பட் நிறைய பணம் கொடுத்திருந்தாரே! அதனால் அவர் மிகவும் தெளிவாக அனைவரிடமும் சொன்னார், இந்தக் கிழவி ரொம்பத் தொல்லை கொடுக்கிறாள் என்று அவளது மகனும் மருமகளும் என்னிடம் ஏற்கனவே சொன்னார்கள். வீட்டில் இருந்த எல்லாருக்கும் இவளைப் பிடிக்கவில்லை. அவர்கள் என்னிடம் பணம் கொடுத்து வைத்திருக்கிறார்கள். இவளது சாப்பாட்டுக்கும் தங்குவதற்கும் எனது வீட்டுத் திண்ணையிலேயே ஏற்பாடு செய்கிறேன், ஏனென்றால் இவள் எனது தூரத்து உறவுச் சகோதரிதான்.

மோதிபாய் தனது இயலாமையைக் காட்டிக்கொண்டு, தனது மூட்டையைத் தலையில் வைத்துக்கொண்டு அந்த புரோகிதரின் வீட்டுத் திண்ணையில் போய் அமர்ந்தாள். அந்தத் திண்ணையில் இருந்து கங்கையின் ஒரு கட்டம் நன்றாகத் தெரிந்தது.

இரவு எங்கும் நிசப்தமான பிறகு, மோதிபாய் ஒரு கையில் தடி, மறு கையில் மூட்டை, தோளில் துணிப் பை என மெதுவாக நடந்து கங்கையின் அந்த எதிரே இருந்த கட்டத்திற்கு வந்தாள். அங்கே ஒரு பறவை கூட இல்லை.

மோதிபாயிடம் இருந்த அந்த மூட்டையில் ராணி லக்ஷ்மிபாயின் அஸ்தி இருந்தது, ராணி லக்ஷ்மிபாயின் ரத்தம் படிந்த அவரது தலைப்பாகையும் (பேட்டா) இருந்தது. எல்லாவற்றையும் விட மிக முக்கியமானதும், எச்சரிக்கையாகக் கையாள வேண்டியதும் ராணி லக்ஷ்மிபாயின் வாள்.

ராணி லக்ஷ்மிபாயின் அஸ்தி, அவரது ரத்தம் படிந்த தலைப்பாகை மற்றும் அவரது வாள் ஆகியவற்றை ராணி லக்ஷ்மிபாயின் விருப்பப்படியே பிரிட்டிஷ் ஆட்கள் எவரும் தொடாமல் கங்கையில் விசர்ஜனம் செய்வது அவசியமாக இருந்தது.

ராணி லக்ஷ்மிபாய் பிரிட்டிஷ் ஆட்களின் தீண்டல் இருக்கக் கூடாது என்ற ஒரே ஒரு நிபந்தனையை மட்டும்தான் விதித்திருந்தார். ஆனால் மோதிபாய்க்கு அந்தப் புனிதமான பொருட்களை கங்கையின் புனித நீரிலேயே விசர்ஜனம் செய்ய வேண்டும் என்பதும், அதுவும் தனது கைகளாலேயே செய்ய வேண்டும் என்பதும் ஆசையாக இருந்தது. ராணி லக்ஷ்மிபாய் அவளைத் தனது சொந்த சகோதரியாகவே கருதினார், மேலும் மோதிபாயின் ஒவ்வொரு வார்த்தையின் மீதும் ராணிக்கு முழு நம்பிக்கை இருந்தது. இதனால் அந்த வீராங்கனையின் அஸ்தி, ஆயுதம் மற்றும் தலைப்பாகையை கங்கையில் தானாகவே விசர்ஜனம் செய்வது மோதிபாயின் உச்சகட்டமான மற்றும் ஒரே ஆசையாக இருந்தது.

பகலில் அந்த வாளை விசர்ஜனம் செய்வது சாத்தியமில்லாத ஒன்று. அந்த வாள் நிச்சயமாக பிரிட்டிஷ் கைகளில் சிக்கியிருக்கும். அதனால்தான் மோதிபாய் இந்த நள்ளிரவு நேரத்தைத் தேர்ந்தெடுத்தாள்.

மோதிபாய் தனது பையில் ராணி லக்ஷ்மிபாயின் அஸ்தி, வாள் மற்றும் தலைப்பாகையை வைத்துக்கொண்டே அந்த கட்டத்திற்கு வந்திருந்தாள். ஒவ்வொரு படியாக இறங்கும்போது மோதிபாய்க்கு பல விஷயங்கள் வரிசையாக நினைவுக்கு வந்தன. ஆனால் அந்த நினைவுகள் இன்று அவளுக்குச் சிறிதும் வருத்தத்தைத் தரவில்லை. மோதிபாய்க்கே இது ஆச்சரியமாக இருந்தது. வழக்கமாக லக்ஷ்மிபாயின் நினைவு வந்தாலே மோதிபாய் தனது கண்ணீரை வலுக்கட்டாயமாகக் கட்டுப்படுத்த வேண்டியிருக்கும்.

இன்று மட்டும் ஏதோ ஒரு மாற்றம் நிகழ்ந்தது. லக்ஷ்மிபாயின் ஒவ்வொரு நினைவுடனும் மோதிபாய் கட்டத்தின் ஒவ்வொரு படியாக இறங்கினாள். ஒவ்வொரு படியிலும் அவளது மனதில் ஒரு மகிழ்ச்சியான உணர்வும், பெருமிதமும், புனிதமான உணர்வும் அதிகரித்துக்கொண்டே இருந்தது.

கடைசிப் படிக்கு வந்ததும் மோதிபாய் முதலில் ராணி லக்ஷ்மிபாயின் அஸ்தியை விசர்ஜனம் செய்தாள். பின் அவரது தலைப்பாகையை விசர்ஜனம் செய்தாள். அதன் பிறகு மோதிபாய் ராணி லக்ஷ்மிபாயின் அந்த கடைசி வாளை இரண்டு கைகளாலும் பிடித்து முதலில் நெற்றியில் ஒற்றிக்கொண்டாள். ராணி லக்ஷ்மிபாய்க்கு மிகவும்

பிடித்தமான, அவர் தினமும் சொல்லும் ஓம் நமோ பகவதே வாசுதேவாய என்ற மந்திரம் மோதிபாயின் நாவில் இருந்தது. அது 108 முறை முடிந்த பின்னரே மோதிபாய் அந்த வாளைக் கங்கைக்கு அர்ப்பணிக்க வேண்டும் என்று நினைத்தாள்.

ஆனால் மந்திரம் 80-ஐ நெருங்கிக் கொண்டிருக்கும்போதே, பிரிட்டிஷ் வம்சத்தைச் சேர்ந்த போலீஸ் அதிகாரி தனது ஆயுதமேந்திய படையுடன் அவளைக் கைது செய்யத் தேடி வந்தான். அவனது படையைச் சேர்ந்த ஒரு இந்திய சிப்பாய் மோதிபாய் படியில் இறங்குவதைப் பார்த்து அடையாளம் கண்டுகொண்டான்.

ஏனென்றால் மோதிபாய் அப்போது அந்த முதிய கைம்பெண் வேடத்தில் இல்லை, அவள் ஜான்சியின் ராணுவ உடையில் இருந்தாள். வீராங்கனை ராணி லக்ஷ்மிபாயின் அஸ்தியையும் வாளையும் திருட்டுத்தனமாக ஒளிந்து மறைந்து விசர்ஜனம் செய்வது மோதிபாய்க்குப் பிடிக்கவில்லை.

அந்த ஆயுதமேந்திய படையுடன் மோதிபாய்க்கு மோதல் தொடங்கியது. ராணி லக்ஷ்மிபாயின் வாளை இடது கையில் பிடித்துக்கொண்டு, வலது கையில் இருந்த தனது வாளால் போரிட்டுக்கொண்டே மந்திரத்தை முடிப்பதில் கண்ணும் கருத்துமாக இருந்தாள்.

எந்தக் கணத்தில் மந்திரம் 108 முறை முடிந்ததோ, அதே கணத்தில் மோதிபாய் ராணி லக்ஷ்மிபாயின் வாளைக் கங்கைக்கு அர்ப்பணித்தாள். அடுத்த கணமே ராணுவ உடையில் இருந்த அந்த வீராங்கனை மோதிபாய், பிரிட்டிஸ் ஆட்கள் சுட்ட குண்டு பாய்ந்து கங்கையில் விழுந்தாள். அனைவரிடமிருந்தும் எல்லாவற்றிலிருந்தும் விலகி கங்கையிலேயே தனது கடைசி மூச்சை விட்டாள். அவளது முகத்தில் இருந்த அந்த மகிழ்ச்சிக்கும் மனநிறைவுக்கும் வரலாற்றில் ஈடு இணை ஏதுமில்லை.

(கதை தொடரும்)

मराठी >> हिंदी >> English >> ગુજરાતી>> ಕನ್ನಡ>> తెలుగు>> বাংলা>> മലയാളം>>

Comments